[ அரசியலிலும், காயிதே ஆஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார்.
அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே ஆஸாம் அறிந்து தான் இருந்தார்.]
[ காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்த ஆஸாத் அவரைப்பற்றி கூறும் சுவையான வரலாற்றுத்தொடர் ]
”1939ம் வருடம் முஸ்லீம் லீக் அதனுடைய வாலிபப் பருவத்தில் இருந்தது - நானும் அது போலவே தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள வயதில் இருந்தேன்… ஏதாவது. நான் திடமாகவும் கட்டுமஸ்தான உடலைக் கொண்டவனாகவும் இருந்தேன். என் வழியில் எது வந்தாலும் அதனோடு மோதுவதற்குத் தயாராக இருந்தேன். நான் எதற்கும் துணிந்தவனாக இருந்தேன்.
என் சொந்தக் கரங்களாலேயே ஏதேனும் ஒரு ஜந்துவை வடிவமைத்து அதனோடு கண்மூடித்தனமாக மல்யுத்தம் செய்வதற்கும் நான் தயாராக இருந்தேன். வாலிபம் அப்படிப்பட்டது தான். ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்பில், அதுவும் அது மிகப் பெரிய விசயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், சதா சர்வகாலமும் அமைதியற்ற நிலையில் தான் இருப்போம். வெறுமனே அமைதியாக உட்கார மட்டும் முடியவே முடியாது.”
இதைச் சொன்னது, சினிமா நடிகர் ஆஸாத் - இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. நாடு துண்டாக்கப்படுவதற்கு முன்பு பம்பாய் திரைப்படத்துறையில் இருந்தான். அதற்குப் பிறகு லாகூரில் குடியிருக்க, அங்கு மற்ற சக நடிகர்கள் போல வாழ்வதற்கே போராடிக் கொண்டிருக்கிறான். பாகிஸ்தானில் திரைப்படத்துறை அப்படிப்பட்ட நிலையில் தான் இருந்தது. அவன் காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்தவன் என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். அது உண்மைதானா என்று தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருந்ததால், ஒரு நாள் அவனைத் தேடிச் சென்றேன். அவனுடைய கடந்த கால நினைவுகளை மீட்டெடுப்பதற்கு நான் பல சந்திப்புகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இனி ஆசாத்தே பேசட்டும்.
ஒரு சமயம் காலிப் இளமையாய் இருந்தது போல் தான் நானும் இருந்தேன். அந்த மாபெரும் கவிஞன் அரசியல் இயக்கத்தால் உள்ளிழுக்கப் பட்டானா இல்லையா என்று எனக்குத் தெரியாது என்றாலும் நான் அகில இந்திய முஸ்லீம் லீக்கினுடைய உறுதியான தொண்டன் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். மற்ற எத்தனையோ இளைஞர்கள் போலவே தான் நானும் காஸியாபாத் கிளையின் நேர்மையான உறுப்பினராக இருந்தேன். நேர்மையாக என்று சொல்வதற்குக் காரணம் என்னிடம் இருந்தது எல்லாம் அது ஒன்று தான்.
முஹம்மது அலி ஜின்னா டெல்லி வந்த போது, அதுவரை, அந்த அளவில் எவருமே பார்த்திராத ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டதை என்னால் தெளிவாக நினைவு கூர முடிகிறது. காஸியாபாத் வாலிபர்களான நாங்கள் அந்த நிகழ்வு பெரும் வெற்றியை அடைவதற்குச் சாதாரணமாக பங்காற்றவில்லை.