நீடூர்
முகவரி: நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203
எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது.
இந்திரன், சூரியன், சந்திரன், காளி, நண்டு உருவு எய்திய தன்மசுதன், இவர்கள் வழிபட்டுப் பேறுபெற்றதலம். முனை யடுவார் நாயனார் திருவவதாரஞ் செய்தருளியது இவ்வூரில் தான்.
தீர்த்தங்கள்: இந்திரதீர்த்தம், பத்திரகாளி தீர்த்தம், ஆனந்ததீர்த்தம், சந்தரபுட்கரணி, பரிதிகுண்டம், முதலானவை. தலவிருட்சம்: மகிழமரம்.
கல்வெட்டு:
(See the Annual Reports on South Indian Epigraphy for the year 1921, No. 534 – 537) இத்திருக்கோயிலில், முதற் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசாதிஇராச சோழன், மூன்றாம் இராசராசன் இவர்கள் காலங்களில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
முதற் குலோத்துங்க சோழனது கல்வெட்டுப் பாடலால் இந்நீடூர்க் கோயிலில் எழுந்தருளியிருக்கும் உமையொடு நிலாவின பெருமானுக்கு, மிழலை நாட்டுவேள் கண்டன் மாதவன் உத்தம விமானத்தை அமைத்த செய்தி பெறப்படுகின்றது.
யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை இவைகளை ஆக்கிய ஆசிரியரின் பெயரை, மக்கள் அமுதசாகரர் என்றே கொண்டுள்ளனர். ஆனால் இக்கோயிலில் கல்வெட்டுப் பாடலால் அவைகளை ஆக்கியவரின் திருப்பெயர் அமிதசாகரர் என்றே கொள்ளக் கிடக்கின்றது, `அளப்பருங்கடல் அருந் தவத்தோன்` என்ற அந்நூல் பாயிரத்து அடியின் பொருளும் அமித சாகரர் என்ற பெயரையே குறிப்பதாகும்.
மூன்றாம் இராசராச சோழனுடைய கல்வெட்டு, திருஇந்தளூர் நாட்டு இராஜசிகாமணிச் சதுர் வேதி மங்கலத்தில் உள்ள புகழாபரணப் பிள்ளையார் கோயிலில் நாட்டார், கறையார் முதலானோர் கூடி 1/32 வேலி நிலத்துக்குப் பண்டுபோல் இரண்டு காசுவரி வசூலிப்ப தென்றும், வெட்டி, விநியோகம் இவைகளுக்கு முறையே ஐந்து, ஒன்று, காசுகள் வசூலிப்பதென்றும் அரசனைத் தவிர வேறு எவர்களும் தங்களுக்கு வரிவிதிக்கக் கூடாதென்றும் தீர்மானித்துள்ள செய்திகளைப் புலப்படுத்துகின்றது. இந்நீடூர் இராஜாதி ராஜவள நாட்டு இந்தளூர் நாட்டைச் சேர்ந்ததாகும்.
நன்றி : Source : http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=171





