ஆக்டோபஸ் ரூபத்தில் வந்த அறியாமை.
Posted on : 27-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)
0
மு.செ.மு. நெய்னா முஹம்மது
நடந்து முடிந்த உலக்கோப்பை கால்பந்துப்போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் மோதிய இரண்டு அணிகளில் கடைசியாக வென்று உலகக்கோப்பையை தட்டிச்சென்ற ஸ்பைன் அணியை விட இன்று உலகில் பிரபல்யமாக பேசப்பட்டு வரும் ஜெர்மனிய மியூசியத்தில் உள்ள ஆக்டோபஸ் என்னும் கடல் பிராணி (அதாங்கெ நம்மூரு கடைத்தெருவுலெ விற்கும் கணவா மாதிரி இருக்குமே அதே தான்).
காரணம் அந்த ஆக்டோபஸ் கடல் பிராணியானது இன்று நடக்கும் உலக கால்பந்து ஆட்டத்தில் மோதும் இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றி பெரும் என்று கண்ணாடிப்பெட்டிக்குள் இறக்கி வைக்கப்பட்டுள்ள அவ்விரு நாட்டின் கொடிகளில் அது எதை தன் கால்களால் (கால் எது? கை எது? என்று நம்மால் துல்லியமாக சொல்ல முடியாத கன்ஃபூஸ் ஆன ஒரு பிராணி) எந்த நாட்டுக்கொடியைப் பற்றிப்பிடிக்கின்றதோ அந்த நாடு அன்று வெற்றி பெரும் என்பதே. அது போல் அரையிறுதி ஆட்டங்களில் பார்க்கப்பட்டு அதன் முடியும் துல்லியமானதாக கருதப்பட்டது.
அப்படி துல்லியமாக தன் கணிப்பை உலகுக்கு கூறிய அந்த ஆக்டோபஸுக்கு தான் பெருங்கடலில் எட்டுத்திசைகளிலும் சுற்றித்திரிந்து தனக்கு இஷ்டப்பட்டதை வேட்டையாடி உண்டு மகிழ்ந்து வந்த சமயம் நாம் அப்பக்கம் சென்றால் மேலே வலை வீசி நம்மை மனிதர்கள் பிடித்துச்சென்று நம்மை மியூசியத்தில் பார்வைப்பொருளாக வைத்து காசு பார்த்து விடுவார்கள். அதனால் நம் சுதந்திரம் பறிக்கப்பட்டு நாம் தனிமைப்படுத்தப்பட்டு சிறை வைக்கப்படுவோம் எனவே அங்கு செல்வது நமக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று முன் கூட்டியே துல்லியமாக தெரியாமல் போனது ஏனோ?
இதைப்படித்ததும் யாரோ இங்கு இப்படி முணு,முணுப்பது போல் தெரிகிறது (நம்மையும் ஆக்டோபஸ் லிஸ்ட்லெ சேர்த்துடாதியெ) அது யூகித்தது நடந்ததா? இல்லையா? என்று. 130க்கும் மேல் உள்ள ஒட்டு மொத்த உலக நாடுகளின் கொடிகளை தண்ணீர்த்தொட்டியில் இறக்கி அதில் உலகக்கோப்பையை வெல்ல இருக்கும் நாடு எது என்று அதனால் துல்லியமாக கணித்துச் சொல்ல முடியுமா?
ஒரு கார்ட்டூனில் போடப்பட்ட ஒரு கருத்துப்படம் சிரிப்புடன் சிந்திக்கவும் வைக்கின்றது. ஆக்டோபஸின் துல்லியமான கணிப்பால் கிளி வைத்து ஜோசியம் பார்த்தவர்கள் அக்கிளிகளை கூண்டிலிருந்து விரட்டி அடித்து ஆக்டோபஸ்களை வைத்து ஜோசியம் பார்க்க ஆரம்பித்து பின் கிளிகளெல்லாம் வேலையின்றி வேலைவாய்ப்பு தேடி அலைவது போலும் வரையப்பட்டிருந்தது.
மரங்கொத்தி ஒன்று தரையில் அடிக்கடி குக்கு, குக்கு என்று கூவி மண்ணைக்கொத்தினால் அம்மண்ணின் அடியில் எதோ கனிம வளம் (அ) எண்ணெய் வளம் இருப்பதாக இவ்வுலகம் எண்ணிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அடுத்த வருடம் நடக்க இருக்கின்ற ரஷ்ய நாட்டு பாராளுமன்ற தேர்தலில் யார் வென்று பிரதமராவார்? என்ற முன் கணிப்பிற்காக ஆக்டோபஸ் விரைவில் ரஷ்யா பயணிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
அடுத்த வருடம் நடக்க இருக்கின்ற ரஷ்ய நாட்டு பாராளுமன்ற தேர்தலில் யார் வென்று பிரதமராவார்? என்ற முன் கணிப்பிற்காக ஆக்டோபஸ் விரைவில் ரஷ்யா பயணிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
மூட நம்பிக்கைகளும் அதன் உடன் பிறப்புக்களும் உலகில் எங்கு தான் இருக்கவில்லை?
ஒரு காலத்தில் நம்மூரிலும் இறைநிராகரிப்போருக்கு நிகரான கீழ்கண்ட சில மூட நம்பிக்கைகள் நம் மக்களிடம் இருந்து வந்தன. ஆனால் அது போன்ற மூட நம்பிக்கைகள் இன்றும் நம்மூரில் இருக்கின்றனவா என்று சரியாகத்தெரியவில்லை.
1. புது வீடு குடிபுகும் பொழுது அடுப்பில் பால் பொங்கி குடிபுகுதல் நம் மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஒன்றா? இல்லை மாற்று மத பின்பற்றலா? என்பதை விளக்கம் உள்ளவர்கள் இங்கு பின்னூட்டத்தின் மூலம் விளக்கவும்.
2. இரவில் ஆந்தை ஆணும், பெண்ணும் சேர்ந்து கத்தினால் அப்பகுதியில் விரைவில் யாருக்கோ திருமணம் நடக்கப்போகிறது. (பரவாயில்லை ஆக்டோபஸின் முன்னோடியாக இருக்குமோ?).
3. வீட்டின் முற்றத்தில் காக்கை வந்து கா, கா என்று காத்திக்கொண்டிருந்தால் அவ்வீட்டிற்கு கடிதம் வரும். (கடிதப்போக்குவரத்து குறைந்து போன இக்காலத்தில் மின்னஞ்சல் (ஈமெயில்) தான் வரும் என்று அம்மூட நம்பிக்கை மறுமலர்ச்சி பெற்றாலும் பெறலாம்).
4. ஏதேனும் பழக்கொட்டையை பழத்துடன் விழுங்கி விட்டால் வயிற்றில் செடி முளைக்கும் என்று சொல்வார்கள். (அப்போ நிறைய பழக்கொட்டைகளை விழுங்கினால் இலவசமாக வயிற்றிற்குள் ஒரு பெரும் தோப்பையே வாங்கிவிடலாமுண்டு சொல்லுங்க).
5. இரு நபர்களின் தலையும், தலையும் ஏதேச்சையாக முட்டிக்கொண்டால் தலையில் கொம்பு முளைக்கும் என்பார்கள். எனவே இன்னொரு தடவை முட்டிக்கொண்டால் முளைக்காதாம். (என்னா டெக்னிக்கு பாத்தியளா?)
6. ஊரில் நாய் ஊலையிட்டால் சிலர் பேய் வருவதற்கு அது ஒரு சிக்னல் என்றும் சிலர் ஏதோ ஊரில் புதிய நோய் பரவ இருப்பதற்கு அது ஒரு அறிகுறி என்றும் சொல்வார்கள்.
7. மீன் சாப்பிட்டு விட்டு (உச்சி உரும நேரத்தில்) வெளியில் சென்றால் பேய் பிடிக்கும் என்பார்கள். எனவே கை மற்றும் வாயில் நல்ல மனம் வீசும் பவுடர் தடவிக்கொண்டு செல்லச்சொல்வார்கள். (இது ஏதோ பவுடர் கம்பெனியின் சித்து, மத்தா ஈக்கிமோ?)
8. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு பாய் விரிக்கும் பொழுது தலைகீழாக (புறம் பாய்) விரித்தால் அதற்கும் ஏதோ காரணம் சொல்வார்கள்.
9. அம்மை போடும் குழந்தைகள் வீட்டின் வாயிலில் வேப்பிள்ளை தொங்கும்.
10. ஆந்தை தனியே இரவில் கத்தினாலோ அல்லது வானில் விண்மீன் எரிந்து விழக்கண்டாலோ ஊரில் யாரோ முக்கியஸ்தர் மரணிக்க இருப்பதாகவும் சொல்வார்கள்.
இப்படி இன்னும் ஏராளம் நம்மூரில் நிலவிய, நிலவி வரும் மூட நம்பிக்கைகளை அடுக்கலாம். ஆனால் பெரும்பான்மையான மூட நம்பிக்கைகள் இன்று குறைந்து விட்டன. அதை கூறி வந்த பெரியவர்களில் பெரும்பாலானோர் உலகை விட்டும் போய்ச்சேர்ந்து விட்டார்கள்.
எனவே நம் தூய மார்க்கம் இஸ்லாம் மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் அப்பார்ப்பட்டது. ஏதோ சைத்தானின் சூழ்ச்சியில் அப்படி நடப்பது போல் ஒரு மாயயை ஏற்படுத்தி அதை மக்கள் எவ்வாறு நம்புகிறார்கள் அல்லது மறுக்கிறார்கள் என்ற ஒரு சோதனை தான் உலகில் இவ்வாறான நிகழ்வுகள். இதனால் கண்டதேக்காட்சி; கொண்டதேக்கோலம் என்று நம்புவர்களுக்கு இறுதியில் நாசத்தை தவிர வேறொன்றும் இருக்கப்போவதில்லை.
நிச்சயமாக இஸ்லாம் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு உன்னத மார்க்கம். அறிவியலே அசந்து போகும் இஸ்லாத்தின் அறிவியல் உண்மைகளை இன்றைய விஞ்ஞான உலகம் ஏற்க மறுத்தாலும் ஒரு நாள் அதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு அது தள்ளப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ்.
ஏதோ என் அறிவுக்கு எட்டியதை இங்கு எழுதியுள்ளேன். தவறுகள் இருப்பின் பின்னூட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள். தெரிந்து கொள்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ் இன்னொரு கட்டுரையில் சந்திப்போம்.
மு.செ.மு. நெய்னா முஹம்மது






