Featured Posts

  • Prev
  • Next

எகிறும் தங்கம், பதறும் பெண்கள்

Posted on : 30-07-2010 | By : mohamedali | In : கட்டுரைகள் (ARTICLES)

0

சேவியர்

sruthதங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விண்ணைத் தொட்டிருப்பது கல்யாணம் கச்சேரியை நெருங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்களில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்பெல்லாம் இத்தனை பவுன் நகை என்று பேசிக்கொண்டிருந்தவர்கள் இப்போதெல்லாம் இத்தனை ரூபாய்க்கு நகை என்றே பேசிக்கொள்கின்றனர். காரணம் நாள் தோறும் எகிறிக் குதிக்கும் தங்கத்தின் விலை.

தங்கத்தின் விலையேற்றத்துக்கு அடுத்த தெரு கடைகள் முதல் சர்வதேச கச்சா எண்ணையின் விலை வரை பல்வேறு காரணங்களை ஆர்வலர்கள் அலசி ஆராய்ந்து பல்வேறு தகவல்களைத் தந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

தங்கம் எதற்கு ? வேறு ஆபரணங்களே இல்லையா ? தங்கம் போட்டால் தான் ஆச்சா ?  என கேள்வி எழுப்பினால் என்ன பதில் கிடைக்கிறது ?

“விற்றால் விலை கிடக்கும், அடகு வைக்கலாம்” என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் தங்க நகைகள் தான் வேண்டும் என்பதில் ஆழமான காரணம் இல்லை.

நகர்ப்புற இளம் வயதினர் தங்கத்தை தூர எறிந்து விட்டு ஃபாஷன் நகைகளுக்கு மாறி வெகு நாட்களாகிறது. பாஷன் நகைகள் நகரின் எல்லா கடைகளிலும் எல்லா நிறங்களிலும், எல்லா வடிவங்களிலும் கிடைக்கிறது. பலர் இதை ஒரு குடிசைத் தொழிலாகவே செய்தும் வருகின்றனர். சில நூறு ரூபாய்களுக்கே காதணி, வளையல், கழுத்துச் சங்கிலி என எல்லாவற்றையும் ஒரே ஸ்டைலில் வாங்கவும் முடியும் என்பது இந்த வகை நகைகளின் சிறப்பம்சம்.

பட்டுப் புடவைகளை எடுத்துப் பாருங்களேன். முன்பெல்லாம் பட்டுப் புடவை உடுத்தாத பெண்களை திருமண வீட்டில் பார்ப்பது அரிது. அரிது என்பதை விட குதிரைக் கொம்பு என்று கூட சொல்லலாம். காரணம் பட்டு கட்டாம போனா கவுரக் குறைச்சல் என நினைத்தது தான். இப்போதெல்லாம் நிலமை மாறிவிட்டது ஃபாஷன் டிசைனர்ஸ் சேலைகள் தான் கண்களில் அதிகமாய் தென்படுகின்றன.

பட்டுப் புடவை செம வெயிட்டுப்பா… அதையெல்லாம் தூக்கிட்டு நடக்க முடியாது” என இளம் பெண்கள் வெளிப்படையாகவே மறுக்கத் துவங்கிவிட்டார்கள்.

எது வசதியாக இருக்கிறதோ, எது மலிவாகக் கிடைக்கிறதோ அதைப் பயன்படுத்தும் போக்கு நிச்சயம் வரவேற்கத் தக்கது. காரணம் ஆடை, நகை எல்லாமே நமக்கு ஆனந்தம் தருவனவாக இருக்க வேண்டுமே தவிர, நம்மை வருத்துபவையாக இருக்கக் கூடாது என்பதே எனது கருத்து.

பிளாட்டினம், இரிடியம், பல்லாடியம், ருத்தேனியம், ரோடியம் மற்றும் ஓஸ்மியம் என பல்வேறு நகைகள் இருந்தாலும் அவையெல்லாம் தங்கத்தை விட அதிக விலை என்பதால் அவற்றையும் ஒதுக்கியே வைக்க வேண்டியிருக்கிறது.

சரி தங்கம் இல்லையேல் அப்படி என்னதான் வாங்கலாம் ?

பிளாட்டிஃப்னா கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? பிளாட்டிஃப்னா என்றால் ஸ்பானிஷ் மொழியில் செழுமைப்படுத்தப்பட்ட வெள்ளி என்பது பொருள். 92.5 விழுக்காடு வெள்ளியும், ஒரு விழுக்காடு பிளாட்டினமும், எட்டு விழுக்காடு மற்ற உலோகப் பொருட்களும் கலந்து உருவாகியிருக்கும் இந்த பிளாட்டிஃப்னா எனும் புது வகை உலோகம் 2005 ல் அறிமுகம் செய்யப்பட்டது.

பிளாட்டினத்தின் வனப்பும், வெள்ளியின் மினுமினுப்புமாய் கலந்து புதுவிதமான அழகுடன் திகழ்கிறது இந்த பிளாட்டிஃப்னா !

டைட்டானியம் எனும் உலோகம் வலுவான பொருள். பளிச்சென இல்லாமல் சாம்பல் நிறத்தில் பளபளப்பான நகைகளாய் வடிவம் எடுத்திருக்கிறது. மருத்துவக் குணாதிசயங்களும் உண்டு என சொல்லப்படும் இந்த டைட்டானியம் நகைகள் சமீபகாலமாக பிரபலமாகி வருகின்றன. நீண்ட காலம் பயன்படுத்தலாம் எனும் உத்தரவாதத்துடன் வருகின்றன இந்த டைட்டானியம் நகைகள்.

டங்ஸ்டன் கார்பைடு என்பது டைட்டானியத்தைப் போலவே ஆனால் சற்றே அடர்த்தி குறைந்த நிறத்தில் கிடைக்கும் உலோகம். கார்பனையும் டங்ஸ்டன் எனும் உலோகத்தையும் கலந்து உருவாகியிருக்கும் இந்த உலோகம் எந்த விதமான நகைகளையும் செய்வதற்கு உகந்ததாம். அமெரிக்காவில் தங்கம் பயன்படுத்தும் ஆண்களின் விடுக்காடு 40 விழுக்காடு சரிந்து டங்ஸ்டன் நகைகள் பயன்படுத்தும் ஆண்களின் விழுக்காடு 50 ஆக உயர்ந்திருக்கிறதாம்.

தங்க முலாம் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் இந்த தங்க முலாமும் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. வெயிலில் அலைந்தால் கறுத்துப் போகும் என்றதெல்லாம் பாட்டி காலத்து சங்கதிகள். தங்கத்தையும், முலாமையும் கைகளில் தந்தால் சத்தியமாய் கண்டுபிடிக்க முடியாது என அடித்துச் சொல்லும் தரத்தில் இன்றைக்கு முலாம் நகைகள் கிடைக்கின்றன.

குறைந்தபட்சம் 10 காரட் தங்கத்தில் .175 செண்டீமீட்டர் அல்லது அதற்கு மேல் எனுமளவில் தரமான தங்க முலாம் பூசப்பட்ட நகைகள் கிடைக்கின்றன.

முலாம் பூசும் முறையை வெப்பத்திலும், அழுத்தத்திலும் தங்க நகையைப்  போலவே செய்யும் முறையும் உண்டு. இதற்கு நகையின் மொத்த எடையில் இருபதில் ஒரு பங்கு தங்கம் இருந்தாக வேண்டும் என்பது நிபந்தனை. இதை தங்க நிரப்பி என்றும் சொல்வார்கள்.

தங்க முலாத்தில் இன்னொரு பிரபலமான வகை வெள்ளியின் மேல் தங்கம் பூசப்படுவது. தரத்துக்கும், எடைக்கும், அழகுக்கும் உத்தரவாதம் இது.

தங்க நிற நகைகள் இன்னொரு வகை. இது தங்க முலாம் பூசப்படுவதல்ல, வெறுமனே தங்கத்தின் நிறம் பூசப்படுவது. மிக மிக மலிவானது. தரமும் சற்று குறைவானதே. ஆனாலும் பார்வையில் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதபடி நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் புகுந்திருக்கிறது.

ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அல்லது துருப்பிடிக்காத எஃகு என்பது இன்னொரு நகை வகை. ஆண்களுக்கான வாட்ச், பிரேஸ்லெட் போன்றவற்றுக்கு சிறந்தது இது. பத்து விழுக்காடு குரோமியத்தையும், .15 விழுக்காடு கார்பனையும் இரும்புடன் சேர்ப்பதால் கிடைக்கும் இந்த உலோகம் விரும்பிய வடிவங்களில் வடித்தெடுக்கும் வலிமை கொண்டது.

தங்கம் விலை குறையாதா குறையாதா என புலம்புவதை விட மிக மிக முக்கியமான தேவைகள் இல்லாத பட்சத்தில் தங்கத்தை விட்டு விட்டு வேறு நகைகளை நோக்கி கவனத்தைச் செலுத்தலாமே ?
தங்கத்தை புறக்கணித்து வேறு நகைகளை வாங்க பெரும்பாலான் மக்கள் நினைப்பது மறைமுகமாக தங்கத்தின் விலை கட்டுக்குள் வருவதற்கும் காரணமாகிவிடும்.

மேலை நாடுகளெல்லாம் தேவையில்லாமல் தங்கத்தில் பணத்தைக் கொட்டுவதைக் குறைத்தாலும் இன்னும் பழைய நினைப்பிலேயே தங்கத்தை நாம் கொண்டாடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
வாழ்க்கை மாறிக்கொண்டிருக்கிறது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் நாம் இந்த நகை விஷயத்திலும் அதை நடைமுறைப்படுத்திப் பார்க்கலாமே

நன்றி : தமிழ் ஓசையில் வெளியான எனது கட்டுரை

நன்றி : http://xavi.wordpress.com/2009/02/25/gold/

Write a comment